பசுக்கள் உயிரிழந்ததற்காக சில மாதங்களுக்கு முன்பு 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.
Lucknow: 1500 பசுக்கள் மாயமான புகாரின்பேரில் உத்தரப்பிரதேசத்தில் மகராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் உள்பட 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2017-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அது முதற்கொண்டு பசுக்களை பாதுகாப்பது அரசின் முக்கிய பணியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பசுக்களை துன்புறுத்துவோருக்கு கடும் தண்டனைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பசுக்களை பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டின்பேரில் மகராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யாயா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆவணங்களின்படி மத்வாலியா பகுதியில் 2 ஆயிரத்து 500 இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நேரில் ஆய்வு செய்தபோது மொத்தம் 954 பசுக்களை இருந்துள்ளன. இதனால் மற்ற பசுக்கள் எங்கே என்று மாநில அரசின் தலைமை செயலர் ஆர்.கே. திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோன்று பசுக்களை பாதுகாப்பதற்கு ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தில் 328 ஏக்கர் நிலம் விவசாயிகள், நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இவற்றின் அடிப்படையில் மகராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யாயா, 2 சப் கலெக்டர்கள், முதன்மை கால்நடைத்துறை அதிகாரி ராஜிவ் உபாத்யாயா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மகராஜ்கஞ்சின் புதிய ஆட்சியராக உஜ்வால் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.