சீனாவின் பிடியில் இருந்து ஹாங்காங்கை பாதுகாப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
United Nations: சீனாவின் வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும், இனி அதற்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஐ.நா.சபையில் பேசியுள்ளார்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே, வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அரசு கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்தது.
இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரிகளை உயர்த்தி வருவதாலும், பொருட்களுக்கு தடை விதிப்பதாலும் மற்ற நாடுகளின் சந்தைகள் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த நிலையில் ஐ.நா.சபையில் உரையாற்றிய ட்ரம்ப் சீனாவை விளாசித் தள்ளினார். ஐ.நா.வில் அவர் பேசியதாவது-
கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் சீனா செய்து வந்த மோசடியை பொறுத்துக் கொண்டோம். அதனை கண்டுகொள்ளவில்லை; அல்லது அதனை ஊக்கப்படுத்தினோம் என்றே வைத்துக்கொள்ளலாம்.
உலகமயமாக்கல் காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது சொந்த நாடுகளின் நலன்களை சற்று கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் அந்த நாட்கள் எல்லாம் முடிந்து விட்டன. ஹாங்காங் விவகாரத்தில் சீனாவை மிகுந்த கவனத்துடன் கண்காணிப்போம். ஹாங்காங்கின் ஜனநாயகத்தை அமெரிக்கா பாதுகாக்கும்.
இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.