This Article is From Apr 28, 2020

வட கொரிய அதிபர் கிம் பற்றி முக்கியத் தகவலை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உலகிலேயே மிகவும் அதிக கட்டுப்பாடுகளும் ரகசியத்துடனும் இருந்து வரும் நாடு வட கொரியா.

வட கொரிய அதிபர் கிம் பற்றி முக்கியத் தகவலை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இதற்கு முன்னரும் இதைப் போன்று, கிம் திடீரென்று தலைமறைவாகியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • கடந்த சில நாட்களாக கிம், பொதுத் தளத்திற்கு வருவதில்லை
  • கடைசியாக அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியே வந்திருந்தார்
  • கிம்மிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்
Washington:

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் பொதுத் தளத்திற்கு வருவதில்லை என்றும் தொடர்ந்து ஒரு தகவல் வந்த வண்ணம் உள்ளது. இதை தென் கொரிய அதிபரான மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர், முற்றிலும் மறுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிம் பற்றி, “கிம்மின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அது குறித்து என்னால் இப்போதைக்குப் பேச முடியாது. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார். 

பின்னர் அவரே, “அவர் நன்றாக இருப்பார் என்றே நினைக்கிறேன். அவர் தற்சமயம் எப்படி இருக்கிறார் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியாது. சீக்கிரமே அவர் பற்றிய தகவல் உங்களுக்குத் தெரியவரும்,” என்று தெரிவித்தார். 

“கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறார். நலமாக இருக்கிறார்,” என்று தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மூன் சுங்-இன் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். 

அவர், “கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியிலிருந்து கிம், வட கொரியாவின் சுற்றுலா தளமான வோன்சானில் தங்கியுள்ளார். அந்த இடத்தில் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த சம்பவமும் நடக்கவில்லை,” என்று தெளிவுபடுத்தியுள்ளார். 

வட கொரியாவை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் அதிபர் கிம்மின் தாத்தாவான கிம் இல் சங். அவரின் பிறந்தநாள் கடந்த 15 ஆம் தேதி. அந்த நாள் வடகொரியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். அப்போது அரசு சார்பில் பெரும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இந்த முறை அப்படிப்பட்ட எந்தக் கொண்டாட்டங்களிலும் கிம் பங்கேற்கவில்லை. இதுதான், அவரின் உடல்நலம் குறித்த கேள்வியை எழுப்பியது. குறிப்பாக அவர் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. 

சென்ற வாரத் தொடக்கத்தில் தென் கொரியாவின் டெய்லி என்கே (Daily NK) என்னும் செய்தி இணையதளம், ‘கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இதயம் சம்பந்தமான சிகிச்சை கிம்முக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவர் அந்த சிகிச்சையிலிருந்து தேறி வருகிறார்' என்று தகவல் வெளியிட்டது. கிம்முக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வந்த தகவலை தென்கொரிய மற்றும் சீன அரசுத் தரப்புகள் உடனடியாக மறுத்தன. 

கிம்மின் குடும்பத்தில் பலருக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கிம்மின் தந்தையான கிம் ஜாங் உன் 2, 2011 ஆம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே மிகவும் அதிக கட்டுப்பாடுகளும் ரகசியத்துடனும் இருந்து வரும் நாடு வட கொரியா. அந்நாடு அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ஐ.நா சபை அந்நாட்டுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அப்படி இருந்தும் சீனாவின் உதவியோடு வட கொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியா, அணு ஆயுதங்கள் குறித்து சோதனை நடத்தி வருவதை நிறுத்தும் நோக்கில் தொடர்ந்து கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னரும் இதைப் போன்று, கிம் திடீரென்று தலைமறைவாகியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு, சுமார் 6 வாரங்களுக்கு அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அப்போதும் அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து அவர், 6 வாரங்கள் முடிந்த பின்னர் ஒரு ஊன்றுகோலுடன் பொதுத் தளத்துக்கு வந்தார். 


 

.