இந்திய ரயவில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி, தவறாக புகார் கொடுத்த நபருக்கு பதிலடி கொடுத்து கெத்து காட்டியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி செயலியை பயன்படுத்தும் ஆனந்த் குமார் என்பவர், ஐ.ஆர்.சி.டி.சி-யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை டேக் செய்து ஒரு புகாரை தெரிவித்திருந்தார். “ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் பல ஆபாசமான விளம்பரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இது மிகவும் அவமானமாகவும் கடுப்பேற்றும் வகையிலும் உள்ளது. இது என்னவென்று பார்த்து நடவடிக்கை எடுக்கவும்” என்று ஆனந்த் குமார் தனது செயலியில் வந்த விளம்பரப் படங்களுடன் ட்வீட்டியிருந்தார்.
இதையடுத்து ஐ.ஆர்.சி.டி.சி தரப்பு, ஆனந்த குமாரை டேக் செய்து, “நாங்கள் கூகுள் நிறுவனத்தில் விளம்பர சேவை டூல் ஆன ஏ.டி.எக்ஸை பயன்படுத்துகிறோம். இணையத்தில் நீங்கள் தேடும் விஷயங்களை வைத்து இந்த விளம்பரங்கள் எங்கள் செயலியில் வரும். எனவே, இதைப் போன்ற விளம்பரங்கள் வராமல் இருக்க உங்கள் இணைய குக்கீஸ் மற்றும் இணைய வரலாற்றை முழுவதுமாக நீக்கவிடவும்” என்று கேலி செய்யும் விதத்தில் ரிப்ளை கொடுத்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி-யின் இந்த பதிலடியைத் தொடர்ந்து, பலரும் புகார் தெரிவித்த பயனரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.