Citizenship Amendment Act - "இந்த குடியுரிமைச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை நாம் பின் வாங்கக் கூடாது. போராட்டம் வெல்லட்டும்"
Citizenship Amendment Act - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சில இடங்களில் இணைய மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், சிறிய அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ பேசினார்.
அப்போது, அவர், “சோவியட் யூனியன் பல பிரச்னைகளால் துண்டு துண்டானது. இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு மாபெரும் பிரச்னை உள்ளது. நம்மை பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. ஒரு பிரிவினரை மட்டும் விளக்கிவைக்கும் இந்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
2047 ஆம் ஆண்டு இந்தியா, இப்போது இருப்பது போல இருக்குமா. அல்லது சோவியட் யூனியன் போல துண்டு துண்டாகுமா என்கிற அச்சம் உருவாகியுள்ளது.
முதலில் மத்திய அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது சட்டப் பிரவை ரத்து செய்தது. பின்னர், ராமர் கோயில் விவகாரம். இப்போது, இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம்.
பல மாநில முதல்வர்களே, இந்தச் சட்டத்தைத் தங்கள் மாநிலத்தில் அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. இந்த போக்கினால், நாடு துண்டு துண்டாகும் அபாயம் உள்ளது. இந்த குடியுரிமைச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை நாம் பின் வாங்கக் கூடாது. போராட்டம் வெல்லட்டும்,” என்று தீர்க்கமாக உரையாற்றினார்.