சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு கண்மூடித்தனமான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. இது தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
இது குறித்து தயாதிதி மாறன், “அமைச்சர் ஜெயக்குமாருக்கு உட்பட்ட தொகுதியில்தான் இந்த போலீஸ் தடியடி சம்பவம் நடந்துள்ளது. எனவே அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தன் சொந்த மக்கள் மீதே இப்படிப்பட்ட வன்முறை ஏன் கட்டவிழ்க்கப்பட்டது என்பது குறித்தும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்,” என தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் உடனடியாக வைரலாக பரவியது.
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டது போல், சென்னையிலும் நடந்த இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரு சில மணி நேரங்களில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.