ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 4 பேர் இன்று காலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கான போலீஸ் டீமை வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவரான வி.சி. சஜ்ஜனார் முன்பு பல என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளார்.
சைபராபாத் போலீஸ் கமிஷனரான சஜ்ஜனார், இன்று காலை நடந்த என்கவுன்டரில் போலீஸ் டீமை வழி நடத்திச் சென்றார். இன்று அதிகாலை 3 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கொண்டு செல்லப்பட்டனர். குற்றம் எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்ட அவர்களிடம் போலீசார் சொன்னபோது, அவர்களில் 2 பேர் போலீசாரை தாக்கி, ஆயுதங்களை பறித்து சுடத் தொடங்கினர். இதையடுத்து தற்காப்புக்காக அவர்களை சுட்டோம் என போலீஸ் தெரிவித்துள்ளது.
2008-ல் வாரங்கல் காவல்துறை அதிகாரியாக சஜ்ஜனார் இருந்தார். அப்போது, 2 பெண்கள் மீது 3 ஆண்கள் ஆசிட் வீசினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைந்த ஆந்திரா இருந்தபோது இந்த ஆசிட் வீச்சு சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிட் வீச்சுக்கு ஆளான 2 பெண்களும் பொறியியல் கல்லூரி மாணவிகள் ஆவார்கள். இந்த சம்பவம் நேர்ந்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஜ்ஜனார் இருந்தார்.
தாங்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசிடமிருந்து பறிப்பதற்காக ஆசிட் வீசிய 3பேர் போலீசாரை தாக்கியுள்ளனர். இதன்பின்னர் என்கவுன்ட்டர் நடந்திருக்கிறது.
அடையாளம் தெரியாத அளவுக்கு ஆசிட் வீச்சால் முகத்தில் மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவி ஐதராபாத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதை பொதுமக்கள் வரவேற்றனர்.
'ஆசிட் வீச்சுக்கு ஆளான 2 பெண்களுக்காக நாங்கள் வருந்துகிறோம். இருப்பினும் என்கவுன்ட்டரில் குற்றவாளிகள் கொல்லப்பட்டது ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாருக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்புகிறோம். இதேபோன்றுதான் கால்நடை மருத்துவர் திஷாவுக்கும் நடந்துள்ளது' என்று உள்ளூர் வர்த்தகரான அமர்நாத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசால் இயங்கும் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வந்த திஷா 4 பேரால் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர் அவரை அந்த கும்பல் எரித்துக் கொன்றுள்ளது. இந்த சம்பவம் சைபராபாத் போலீஸ் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஷாத் நகர் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த மாதம் 28-ம்தேதி நடந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் லாரி ஊழியர்கள் ஆவார்கள். அவர்கள் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் நவம்பர் 29-ம்தேதி கைது செய்யப்பட்டனர்.