மக்களவைத் தேர்தல் ஜூரம் அதிகரித்து வரும் நிலையில், தாங்கள் திமுக-வின் கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமா, ‘திமுக-வுடன் நட்புறவுடன் இருக்கும் கட்சிகளுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துதான் போட்டியிடுவோம். புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் வருவதால் எங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடாது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். திமுக-வின் தேர்தல் குழு விரைவில் எங்களை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றவர்,
‘விசிக சார்பில், எனது சொந்த தொகுதியான சிதம்பரத்திலிருந்து நான் போட்டியிட விருப்பமாக உள்ளேன். அது குறித்து திமுக-விடமும் நான் தெரிவிப்பேன். விரைவில் இது குறித்து சுமூக முடிவு எடுக்கப்படும்' என்று முடித்தார்.
தற்போது திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் திமுக-வுடன் தொடர்ந்து நட்புடன் இருந்து வருகிறது. இந்தக் கட்சிகளும் விரைவில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் திமுக-வுக்கு தொகுதி பங்கீடுப் பிரச்னை வரும் என்று தெரிகிறது.