உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சந்திப்பு கேபெல்லா என்ற சொகுசு ஹோட்டலில் நடைபெற்றது.
கிம்முக்காக ஹோட்டலில் காத்திருந்த டிரம்ப், கிம் வந்தவுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் பின்னர் செய்தியாளர்கள் முன் கைக்குலுக்கிக் கொண்டனர்.
உலகின் இரு எதிரெதிர் துருவங்களின் அந்த கைக்குலுக்கலில் இரு தலைவர்களும் திடமான எண்ணங்கள் கொண்டிருப்பதையும், அதே நேரம் சிறிது பதற்றம் எட்டிப் பார்த்ததையும் உணரமுடிந்ததாக கூறியுள்ளனர்.
சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் கூறியதாவது “ இந்த சந்திப்ப மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உலகம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக்கவே இருந்தது” என்று கூறினார். முன்னதாக சனிக்கிழமை அன்று "கிம்மை சந்தித்த ஆடுத்து நிமிடமே அந்த சந்திப்பு எப்படி நடக்கும் என்று என்னால் கணித்துவிட முடியும்" என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்திப்பில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும், அடுத்த கட்டமாக சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவித்தார்.
அந்த ஒப்பந்தத்தின் படி வட கொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை அமெரிக்கா ஏற்கும். வட கொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்றும் பணிகளை கிம் செய்ய வேண்டும். இருநாடுகளும் தங்கள் உறவை புதுப்பித்து, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும் ஆகியவை அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது.
மேலும், " கிம் அணு ஆய்தங்கள் இல்லாத வட கொரியாவை உருவாக்க முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். ஆனால் அது வரை, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாது" என்று அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கிம் “ அமைதிக்கான தொடக்கமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. அனைத்து சந்தேகங்களையும் தாண்டி நாங்கள் இந்த சந்திப்பை நடத்தியிருக்கிறோம்” என்று கூறினார்.
"வட கொரியாவில் உள்ள ஒரு அணு ஆயுத சோதனைக் கூடத்தை கூடிய விரைவில் மூட உள்ளோம்" என கிம் கூறியதாகவும் டிரம்ப் கூறினார்
இந்த சந்திப்பில் அமெரிக்கா சார்பில் அரசு செயலாளர் மைக் போம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மற்றும் வெள்ளை மாளிகை முதன்மை அதிகாரி ஜான் கெல்லி ஆகியோர் பங்கேற்றனர். வட கொரியா சார்பில் முன்னாள் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் கிம் யாங் சோல், வெளியுறவு அமைச்சர் ரி யாங் ஹோ, ஆளும் தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் ரி யூ சாங் ஆகியோரும் பங்கேற்றனர்.
இருதரப்பினரின் சந்திப்புக்கு பின், இரு நாட்டு உயர் அதிகாரிகளின் சந்திப்பு நடந்தது. அதில் சந்திப்பில் ஆலோசித்த விஷயங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றி அலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ட்வீட் செய்த டிரம்பு “ உயர் அதிகாரிகள் சந்திப்பு நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல், இந்த சந்திப்பில் பேசப்பட்ட அனைத்தும் நடக்குமா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.” என்ற டிரம்பின் ட்வீட்டும் கவனிக்கத்தக்கது.
டிரம்பின் இந்த ட்வீட்டோடு, அமெரிக்க அரசு செயலாளர் போம்பியோவின் முந்தைய கருத்தும் கவனத்துகுரியது “ இந்த சந்திப்பு அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடும் நோக்கில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். வட கொரியா அதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், அந்நாட்டுக்கு எதிரான தடைகள் மேலும் அதிகரிக்கக் கூடும்” என்று அவர் கூறினார்.
செவ்வாய் இரவு டிரம்பும், பிற்பகலில் கிம்மும் தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர். சந்திப்பு பற்றி, ஜப்பான் அதிபரிடமும், தென் கொரிய அதிபர் மூனிடமும் ஆலோசித்ததாகவும் டிரம்ப் கூறினார்.
1950-1953 போரில் இருந்து உலகின் மிகப் பெரிய எதிரி நாடுகளாக இருக்கும் இரு நாடுகளின் அதிபர்கள் இப்போது சந்தித்துள்ளனர். இது வட ஆசிய பகுதியில் அமைதியை நிலை நாட்ட உதவும் என்று நம்பலாம்.