முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டடரில் அவர் கூறியிருப்பதாவது-
பண்டைய காலம் மற்றும் இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த மோசமான பழக்கம் வரலாற்றின் குப்பையில் வீசப்பட்டுள்ளது. முத்தலாக்கை நாடாளுமன்றம் தடை செய்துள்ளது. நீண்ட காலமாக முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் சரி செய்யப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்துக்கும், சமூக சமத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி இதுவாகும்.
முத்தலாக் மசோதா நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இந்திய வரலாற்றில் நிலைதிருக்கும்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய முத்தலாக மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இது மோடி அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஓட்டெடுப்பின்போது அதிமுக, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். பெரும்பான்மை அரசுக்கு கிடைத்ததை தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.