This Article is From Aug 20, 2020

கொரோனா பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை! - தமிழக அரசு அறிவிப்பு

"பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது"

கொரோனா பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை! - தமிழக அரசு அறிவிப்பு

"அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

ஹைலைட்ஸ்

  • வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது
  • பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • கொரோனா பரவல் காரணமாக கொண்டாட்டங்களுக்குத் தடை

விநாயகர் சதுர்த்தி விழாவினை, பொது இடங்களில் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னொரு ஆணையினைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொது மக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.