உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில், வன விலங்குகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன. மெக்சிக்கோவில் உள்ள ஆள் அவரமற்றக் கடற்கரையில், முதலைகள் கொத்துக் கொத்தாக வந்து கெத்தாக உலாவி வருகின்றன. அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மெக்சிக்கோவில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மெக்சிக்கோ நியூஸ் டெய்லி அளிக்கும் தகவல்படி, சுற்றுலா தளமான லா வென்டாநில்லா என்னும் இடத்தில் இருக்கும் முதலைகள், அருகில் உள்ள கடற்கரைக்குப் படையெடுத்து உள்ளனவாம். கடந்த பல ஆண்டுகளாக இல்லாத சம்பவம் இது என்று சொல்லப்படுகிறது.
ஊரடங்கால் ஊரே முடங்கிப் போயுள்ளதால் முதலைகள் ஹாயாக வலம் வருகின்றன. சில முதலைகள் கடல் அலையில் நீந்துவதும் தெரிகிறது.
இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல, மெக்சிக்கோவின் பல இடங்களில் இதைப் போன்ற வன விலங்குகள் சுற்றால தளங்களுக்கு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
உலகம் முழுவதும் மனிதர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எப்போதும் இல்லாத வகையில் வன விலங்குகள் புகுவது குறித்தான படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிரப்பட்டு வருகின்றன. கேரளாவில் கூட சென்ற மாதம், எப்போதும் இல்லாத வகையில் அரிய உயிரினமான புனுகுப் பூனை, சாலையில் நடமாடும் வீடியோ வெளியாகி வைரலாகியது.