தாயின் 2-வது திருமணத்தை கொண்டாடி வாழ்த்து தெரிவித்த கேரள இளைஞரின் முகநூல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். இவரது தாயாரை தந்தை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மகன் வளரும் வரை பொறுத்திருந்த தாயார், பின்னர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அவரும், அவரது மகனும் வீட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது அவர் இரண்டாவது திருமணத்தை முடித்திருக்கிறார். இதற்கு அவரது மகன் கோகுல் ஸ்ரீதர் வாழ்த்துக்கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பதிவு வைரலாகி உள்ளது. கோகுல் தனது பதிவில் கூறியிருப்பதாவது-
இது எனது எனது தாயில் இரண்டாவது திருமணம். இந்த பதிவை எழுதுவதில் நான் தயக்கம் காட்டி வந்தேன். பல சிந்தனைகள் ஏற்பட்டன. தற்போது வரைக்கும் மறுமணம் என்பது தீண்டத்தகாத ஒன்றாகத்தான் சமூகத்தில் பார்க்கப்படுகிறது.
எனது தாய் என்னை மிகவும் நேசித்தார். அவரை எனது தந்தை கொடுமைப் படுத்தி வந்தார். ஒரு சமயம் எனது தந்தை தாக்கியதில் தாய்க்கு நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது. அப்போது தாயிடம், இதையெல்லாம் நீங்கள் ஏன் தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், உனக்காகத்தான் உயிர்வாழ்வதாக கூறினார். எனக்காக அவர் எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வேன் என்றார்.
எனது வீட்டை விட்டு நானும், தாயும் வெளியேறியபோது என் தாய்க்கு நான் இரண்டாவது முடித்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால், தனது வாழ்க்கை முழுவதையும் எனக்காக அவர் அர்ப்பணித்தார். அவருக்கென்று ஆசைகள், லட்சியம் இருந்தன. இனி இந்த ரகசியத்தை நான் மறைத்து வைக்கப் போவதில்லை. 'திருமண வாழ்த்துக்கள் அம்மா'
இவ்வாறு கோகுல் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.