உத்தர பிரதேசத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில், ஆள் உயர பாம்பு ஒன்று உலவிய வீடியோ பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உ.பி-யின் காசியாபாத்தில் உள்ள ஏடிஎம்-ல்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, படுவைரலாக மாறி வருகிறது.
வீடியோவல், ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் மிகத் தடிமனான பாம்பு ஏறுகிறது. ஏடிஎம் இயந்திரத்தின் உச்சியில் ஒரு ஓட்டையை நோக்கி அது போகிறது. ஒரு கட்டத்தில் ஓட்டைக்குள் தன் உடல் முழுவதையும் நுழைத்துக் கொள்கிறது அந்தப் பாம்பு. பாம்பு வந்ததைப் பார்த்து பாதுகாப்புக்கு இருந்த செக்யூரிட்டி, ஏடிஎம் அறைக்கு உள்ளேயே அதைப் பூட்டியுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது அருகிலிருந்த பலர், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
காசியாபாத்தில் உள்ள கோவிந்த்புரி பகுதியில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவைப் பார்க்க:
பலரும் வீடியோவைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் கருத்திட்டு வருகின்றனர். ஒருவர், “இது ரொம்ப பயமாக உள்ளது“ என்கிறார். இன்னொருவர், “பணம் எடுக்கத்தான் அந்தப் பாம்பு வந்துள்ளது. மக்கள் அதை பயமுறுத்தியுள்ளார்கள்,” என்கிறார்.
பாம்பு ஏடிஎம் அறைக்குள் வந்ததைத் தொடர்ந்து உள்ளூர் வனத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர். அது ஒரு விஷப் பாம்பு இல்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளனர் வனத் துறையினர்.