இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்ஸி பன்னு எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் அமர்வு ஒன்றொ நடிகை டாப்ஸி பன்னு கலந்து கொண்டு பலரது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார். அப்போது நடுவில் குறுக்கிட்ட நபரொருவர் “இந்தியில் பேசலாமே” என்று கேட்கிறார். “இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா…?” என்று டாப்ஸி கேட்க பெரும்பாலானோர் இல்லை என்று பதிலளித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து “நீங்கள் பாலிவுட் நடிகைதானே, இந்தியில் தான் பேசவேண்டும்” என்று வலியுறுத்துகிறார். அதற்கு நடிகை டாப்ஸி பன்னு “நான் தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறேன். நான் உங்களுடன் தமிழில் பேசலாமா?” பெரும்பான்மையானவர்களுக்கு எது புரியுமோ அந்த மொழியிலே பேசுகிறேன் என்று கூறிவிடுகிறார். இதைக்கேட்ட பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.
டாப்ஸியின் இந்த கேள்வி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.