உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில், வங்கி, மருத்துவமனை உட்பட அடிப்படை சேவைகள் மட்டுமே இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பாங்க் ஆஃப் பரோடோ வங்கியின் கிளையில் பணி செய்து வரும் ஊழியர் ஒருவர், ஊரடங்கு நேரத்தில் வேலை செய்துள்ளார்.
அவர் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கும் காசோலையை கையால் வாங்காமல், இடுக்கி மூலம் வாங்குகிறார். பின்னர், தன் மேசையில் சூடாக இருக்கும் அயர்ன் பாக்ஸ் கொண்டு இரண்டு பக்கமும் இஸ்திரி போடுகிறார். இந்த வித்தியாசமான சம்பவத்தின் வீடியோ தற்போது படுவைரலாக மாறியுள்ளது. இப்படி செய்வதனால் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த ஊழியரின் இந்த தொலைநோக்கு சிந்தனையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த வீடியோவை மஹிந்திரா வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன் மஹிந்திரா, “இந்த ஊழியர் செய்வது பலன் தருமா என்று தெரியவில்லை. ஆனால், அவரின் கிரியேட்டிவிட்டியைப் பாராட்டியே ஆக வேண்டும்,” என நெகிழ்ந்துள்ளார்.
வீடியோவைப் பார்க்க:
மஹிந்திரா, இந்த வீடியோ பகிரந்ததில் இருந்து 2.5 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 24,000 பேர் லைக்ஸ் தட்டியுள்ளனர். பலரும் அந்த வங்கி ஊழியருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். பாங்க் ஆஃப் பரோடா வங்கி நிறுவனமும் மஹிந்திரா, வீடியோவைப் பகிர்ந்ததற்காக நன்றி தெரிவித்துள்ளது.