Viral Video: நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இருந்தாலும், சில விஷயங்கள் நம் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இந்திய வனத் துறை அதிகாரியான சுதா ராமன், பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் ஊரடங்கால் அமைதியாக இருக்கும் சாலையில், யானை ஒன்று எந்த வித சலனமும் இல்லாமல் நடந்து செல்வது தெரிகிறது.
கேரளாவின் வயநாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஓர் யானை ஹாயாக நடந்து வருகிறது. சிறிது தூரம் வந்து கடைகளை சுற்றும் முற்றும் மேற்பார்வையிடுவது போல பார்க்கிறது. பின்னர் மீண்டும் சலனமில்லாமல் நடந்து செல்கிறது.
வீடியோவுடன் ராமன், “ஊரடங்கு உத்தரவு, முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வையிடும் யானை. வயநாட்டில் யானைகள் நடமாடுவது மிகச் சாதரணமான விஷயம்தான். ஆனால், இந்த யானை நடக்கும் தொனி, ஒரு அரசு அதிகாரியின் உடல் மொழியை நினைவுப்படுத்துகிறது,” என்று கருத்திட்டுள்ளார்.
இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 1.2 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. 6,500 லைக்ஸ்களையும் அள்ளியிருக்கிறது.
இந்த வீடியோவுக்குக் கீழ் ஒருவர், “ஊரடங்கு ஒழுங்காக இருக்கிறதா என்று கண்காணிக்க அரசு நியமித்த அதிகாரி போல உள்ளது இந்த யானை,” என்கிறார். இன்னொருவர், “இந்த யானையின் மைண்டு வாய்ஸ், ‘எங்க இந்த சத்தம் போடுற பசங்களையெல்லாம் காணோம்' என்பது போல இருக்கும்” என நக்கலடிக்கிறார்.
இதைப் போன்று ஹரித்வாரில் எடுக்கப்பட்ட இன்னொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதையும் பார்க்க.