This Article is From Jan 21, 2019

கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 2 பேர் உயிரிழப்பு!

Viralimalai Jallikattu 2019: கின்னஸ் சாதனையை ஏற்படுத்தும் முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது

கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 2 பேர் உயிரிழப்பு!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேன் மையங்களும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு 2 கார்கள், 9 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்து கொண்டதற்காக இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழுவும் வருகை தந்திருந்தது.

இந்நிலையில், விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று கொண்டிருந்த போது, காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த ராமு (35) என்பவர் உயிரிழந்தார். இதேபோல், மாடு முட்டியதால், பலத்த காயமடைந்த திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (43) என்பவரும் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து, கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை வரை நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1400 காளைகள் பங்கேற்றன. 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41பேர் காயம் அடைந்தனர்.

 

 

மேலும் படிக்க : 'தமிழன் வீரத்திற்கு பெயர் பெற்றவன்' - ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து முதல்வர் உற்சாகம்

.