This Article is From Dec 08, 2019

''அயோத்திக்கு வெளியேதான் முஸ்லிம்களுக்கு இடம் வழங்க வேண்டும்'' - வி.எச்.பி. வலியுறுத்தல்!!

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சம்பத்ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான குழுவுக்கு தலைமையேற்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

''அயோத்திக்கு வெளியேதான் முஸ்லிம்களுக்கு இடம் வழங்க வேண்டும்'' - வி.எச்.பி. வலியுறுத்தல்!!

முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்வது என்பது அவர்களது சட்டப்பூர்வமான உரிமை என்று சம்பத்ராய் குறிப்பிட்டுள்ளார்.

Nagpur:

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் சன்னி வக்ப் போர்டு அமைப்புக்கு அயோத்திக்கு வெளியேதான் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சம்பத்ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான குழுவுக்கு தலைமையேற்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் ஒருமானதாக தீர்ப்பை வழங்கியது. இதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ப்போர்டுக்கு வழங்க வேண்டும். அதில் அவர்கள் மசூதியை கட்டிக் கொள்ளலாம்.

இந்த நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சம்பத்ராய் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

அயோத்தி என்பது மிகவும் சிறிய நகராட்சியாகும். கடந்த டிசம்பர் 2018-ல் அயோத்தியும் பைசாபாத் நகராட்சிகளும் மாநகராட்சிகளாக இணைக்கப்பட்டன. எனவே சன்னி வக்ப் போர்டு கேட்கும் 5 ஏக்கர் நிலத்தை பழைய அயோத்தி நகராட்சிக்கு வெளியே வழங்க வேண்டும். 

ராமர் கோயில் கட்டும் குழுவுக்கு தலைவராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. என்னைப் பொருத்தளவில் அவ்வாறு நடக்கக்கூடாது. கோயில் கட்டும் குழு 2020 ஜனவரி மாதத்தில் ஏற்படுத்தப்படும் என நினைக்கிறேன். 

தீர்ப்பை மறு சீராய்வு செய்ய முஸ்லிம் தரப்பினர் கோரியுள்ளனர். இது அவர்களுடைய சட்ட உரிமையாகும். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஏதேனும் எழுத்துப்பிழை, வார்த்தை அமைப்பதில் பிழை, வாதத்தில் விளக்கம் போன்றவற்றுக்காக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம். ஒரு வழக்கறிஞர் என்கிற அடிப்படையில் நான் இதனை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நவம்பர் 9-ம்தேதி வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பை எதிர்த்து 6 மறு சீராய்வு மனுக்கள் தொடரப்பட்டன. 

இவற்றில் 5 மனுக்களை மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலான மஹ்பூசர் ரஹ்மான், மிஸ்பாகுதீன், முகமது உமர், ஹாஜி நஹ்பூப் ஆகியோர் தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. 6-வது வழக்கை முகமது அய்யூப் என்பவர் தொடர்ந்துள்ளார். 
 

.