This Article is From Jan 06, 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜூக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

ஆம் ஆத்மியும் பிரகாஷ்ராஜூக்கு தனது ஆதரவை தெரிவித்து, நல்ல மனிதர்கள் அரசியலக்கு வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜூக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மையில் அறிவித்தார்.

Chennai:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது நண்பர் பிரகாஷ் ராஜூக்கு அவரது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். தான் கூறியதை செயல்படுத்தியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியும் பிரகாஷ்ராஜூக்கு தனது ஆதரவை தெரிவித்து, நல்ல மனிதர்கள் அரசியலக்கு வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தையடுத்து, தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பான கருத்துகளைப் பேசிவருகிறார்.

இந்தநிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பதிவில், என்னுடைய புதிய பயணத்துக்கு, என்னை உத்வேகப்படுத்தும் வகையில் வரவேற்பளித்ததற்கு நன்றி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடவுள்ளேன். இதுகுறித்து விரைவில் ஊடகங்கள் முன்னிலையில் முழு விவரங்களை தெரிவிப்பேன் என்றார்.

.