உலகில் பல நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று காணப்படுவதால் மக்கள் ஒரு கலக்கத்துடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் விமானத்தில் பயணிக்கும்போது கொரோனாவால் பாதிக்காமல் இருக்க இரண்டு பயணிகள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயணம் செய்த இருவர், தங்கள் உடல் முழுவதையும் 'பிளாஸ்டிக்' பையால் முழுமையாக மூடிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். ட்விட்டர் பயன்படுத்தும் அலிஷா என்ற நபர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் "தற்போது விமானத்தில் எனக்குப் பின்னால்" என்று குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பகிரப்பட்ட வீடியோவில் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த பெண், பிங்க் நிற உடையுடன் முகமூடி அணிந்து காணப்படுகிறார். மேலும் அவருடன் இருந்த ஆண், வெள்ளை நிற உடை, கையுறை மற்றும் முகமூடி அணிந்துள்ளார். பயத்தால் அவர்கள் செய்த செயல் தற்போது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ஒருவர், கவனம் இல்லாமல் இருந்து நோய்த் தொற்று ஏற்படுவதற்கு, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லது என்றும், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருந்தால் சரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பயன்படுத்தும் இன்னொரு நபர் கூறும்போது, அவர்கள் இவ்வளவு பாதுகாப்புடன் இருந்தும், இப்போதும் விமானத்தில் உள்ள மற்றவர்கள் சுவாசிக்கும் அதே காற்றைத் தான் அவர்களும் சுவாசிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு நடவடிக்கை இவர்களுக்குத் தெரிந்துள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இதுவரை 15 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.