கடந்த சில நாட்களாக, கடுமையான பருவ மழைப்பொழிவு காரணமாக ஒடிசா மாநில பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21 மற்றும் 22 ஆம் தேதி இரவுகளில் சம்பல்பூர் நகரில் பெய்த கடும் மழை காரணமாக, நகரமே வெள்ளக்காட்சியாக மாறியுள்ளது. தெருக்கள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் நுழைந்ததால், சுமார் 5,000 பேர் தங்குவதற்கு இடமின்றி தவிக்கின்றனர். ஏ.என்.ஐ அளித்த தகவலின் படி, வெள்ளத்தில் சிக்கிய சம்பல்பூர் நகர மக்களை காப்பாற்றும் பணியில் ஒடிஷா பேரழிவு விரைவு நடவடிக்கை படை (ODRAF) , மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஐந்து சேவை குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது, வெள்ளத்தில் சிக்கிய வயதானவர் ஒருவரை பேரழிவு விரைவு நடவடிக்கை படை மீட்புப் பணியாளர் காப்பாற்றிய நம்பமுடியாத ஒரு காணொளி வெளியாகியுள்ளது. ஜூலை 22 அன்று எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் கழுத்தளவு நீரில் சிக்கிய முதியவரை மீட்பு பணியாளர் காப்பாற்றுகிறார். இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே, பல ஆயிரம் பேரால் ’லைக்’ செய்யப்பட்டும் ‘ரீட்வீட்’ செய்யப்பட்டும் வருகிறது இந்த வீடியோ. பேரழிவு விரைவு நடவடிக்கை அதிகாரியின் இந்த தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஓடிஷா மாநிலத்தில் இயற்கை மற்றும் செயற்கை பேரழிவுகளின் பொழுது ‘தேடல் மற்றும் மீட்பு’ செயல்பாடுகளை இயக்குவதே அரசு அமைப்பான ‘ஓடிஷா பேரழிவு விரைவு நடவடிக்கை படை’யின் பிரத்தியேக பணியாகும்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாபில் இரண்டு டிராஃபிக் போலீஸ்காரர்கள் மழையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்; அவர்களது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதியும் வழங்கப்பட்டது.