கர்நாடகாவில் சாலை ஒன்றில் ராட்சத மலைப் பாம்பும், புலியும் நேருக்கு நேர் நிற்கும் பழைய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்ததால், சமூகவலைதளங்களில் மீண்டும் கவனம் பெற தொடங்கியது.
கபினி ரிசார்ட்ஸ் பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சரத் அப்ரகாமால் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கடந்த 2018 ஆகஸ்ட் 31ம் தேதி நாகர்ஹோல் பூங்கா மற்றும் புலிகல் காப்பகத்தில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சரத் அப்ரகாம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, இந்த ஆண் புலி தனது பகுதிக்கு செல்லும் போது, நான் கபினி ரிசார்ட்ஸ் ஓட்டுநர் ஃபெரோஸூடன் இருந்தேன். தொடர்ந்து, 15 நிமிடங்களாக நாங்கள் அந்த புலியை பின்பற்றி வந்தோம். அப்போது சாலையில் இந்த ராட்சத மலைப்பாம்பை பார்த்த போது, ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல இருந்தது. அப்போது முன்னே சென்ற புலி என்ன செய்வது என்று குழப்பமடைந்தத்து என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், புலி பாம்பை சுற்றி கவனமாக நடக்கிறது. அதனை உன்னிப்பாக சிறிது நேரம் கவனிக்கிறது. பின்னர் வலது புறமாக இருந்த புதரின் வழியே பாம்பை கடந்து புலி செல்கிறது. அப்போது, புலி அந்த புல்லுக்குள் ஒளிந்திருந்த படி, பாம்பின் அசைவை கவனிக்க முயற்சிக்கிறது. எனினும், பாம்பு அசைந்து கொடுத்ததை புலி கவனித்துள்ளது. இறுதியில் புலி அமைதியாக பாம்பை கடந்து சென்றது.
இந்த வீடியோவே பகிர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா, மலைப் பாம்புக்கு புலி வழிவிட்டுச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 12,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலர் கமெண்ட் செய்துள்ளனர்.