This Article is From Jul 11, 2019

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கே தண்ணீர் தட்டுப்பாடு! கடும் நெருக்கடியில் சென்னை!!

சென்னையில் சில இடங்களில் ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீர் வற்றி விட்டதால் மக்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் தனியார் டேங்க் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர்.

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கே தண்ணீர் தட்டுப்பாடு! கடும் நெருக்கடியில் சென்னை!!

தண்ணீர் பிரச்னையால் மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நோயாளிகளுக்கு அறுவை செய்வதற்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

தண்ணீர் தட்டுப்பாடு தனது மருத்துவமனையை பாதிக்கப்பட்டுள்ள விதம் குறித்து சுடர் மருத்துவமனைகளின் சேர்மன் ரவி சங்கர் கூறுகையில், 'மருத்துவமனையில் குழாய்கள் மூலம் வரும் தண்ணீர் வறண்டு விட்டது. தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அறுவை சிகிச்சைக்கு கூட தண்ணீரை வெளியில் இருந்து கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த கூடுதல் சுமை நோயாளிகளைத்தான் பாதிக்கும். இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடித்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்' என்றார். 

சென்னையின் பெரும்பாலான மருத்துவமனைகள் சுமார் 5 ஆயிரம் தனியார் டேங்க் லாரி தண்ணீரை நம்பித்தான் உள்ளன. தட்டுப்பாடு காரணமாக டேங்க் லாரி தண்ணீரின் விலையும் அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு இன்று முதல் ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்கள் மூலமாக காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு வர  தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயில் வேகன்கள்  ஜோலார் பேட்டைக்கு நேற்று காலை வந்தடைந்தன. சரக்கு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேகனும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். இதில் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர்  நிரப்பப்படும். ஒருமுறைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.  

தெற்கு ரயில்வேக்கு சென்னை மெட்ரோ குடிநீர் ஆணையம் ஒவ்வொரு பயணத்திற்கும் 7.5 லட்சம் கொடுக்க வேண்டும்.  இந்த திட்டத்துக்காக ரூ. 65 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில்கள் 220 கி.மீ தூரத்தில் உள்ள சென்னை வில்லிவாக்கத்தை அடைய 5 மணிநேரமாகும். அங்கிருந்து கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு விநியோகிக்கப்படும். 


 

.