நடிகை தீபிகா படுகோனுக்கும் நடிகர் ரன்வீர் சிங்க்கும் நேற்று முன்தினம் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. திருமணம் முடிந்தபின்பும் இருவரின் புகைப்படங்களும் வெளிவரவில்லை. இந்நிலையில் நேற்று மாலை தீபிகா மற்றும் ரன்வீரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்கள் முதன் முறையாக வெளியிடப்பட்டன. எந்தவொரு கேப்ஷனும் இல்லாமல் ஹார்ட்டின் எமோஜி மட்டுமே போட்டு போட்டோவை பதிவிட்டுள்ளனர். போட்டோ வெளியான சில நொடிகளிலே வைரலாகி விட்டது. பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஹிர்திக் ரோஷன் 'மிகப்பெரிய வாழ்த்துகள்' என்று தன் வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்பபடங்கள்.
தீபிகாவின் ஸ்டைலிஸ்ட் செலினா நதனி தீபிகா படுகோனின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து 'காதல் மட்டும்' என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.
கரண் ஜோகர் திருமணம் முடிந்ததும் உடனடியாக தனது முதல் வாழ்த்தை தெரிவித்திருந்தார். நடிகை அனுஷ்கா ஷர்மா 'கப்பில் கிளப்பிற்க்கு வரவேற்கிறேன்' என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், பரினிதி சோப்ரா.
இத்தாலியில் உள்ள கோமோ ஏரி என்ற தீவுப் பகுதியில் நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே பங்குபெற தென்னிந்திய முறைப்படி கொங்கனி ஸ்டைலில் ‘தீப்வீர்' திருமணம் நடைபெற்றுள்ளது. இரு குடும்பத்தார் மட்டுமே சூழ மணமக்கள் தங்கள் திருமண நிகழ்வைக் கொண்டாடி உள்ளனர். திருமண நிகழ்வில் நடந்த பார்ட்டி வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.
மணமக்கள் இருவரும் தாங்களே விரும்பும் நேரத்தில் தங்களது புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மொபைல் போனுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் திருமண நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மணமக்களுக்கு முன்பாக யாரும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியில் திருமணம் முடித்த பின்னர் இந்தியா திரும்பும் மணமக்கள் வருகிற நவம்பர் 21-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். மேலும் பாலிவுட் திருவிழா ஒன்றும் மணமக்களை வாழ்த்துவதற்காக நவம்பர் 28-ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது.