This Article is From Jun 04, 2019

சைக்கிள் செயினால் 5 பெண்களை கொன்ற 'சீரியல்' கொலைகாரன் கைது!!

தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலைகாரர் தாக்குதலை நடத்தியுள்ளார். சில இடங்களில் அவர் கொள்ளை அடித்தாலும் முக்கிய காரணம் கொலை செய்வது மட்டுமே என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிள் செயினால் 5 பெண்களை கொன்ற 'சீரியல்' கொலைகாரன் கைது!!

சீரியல் கொலைகாரனின் பிடியில் இருந்து சில பெண்கள் தப்பித்துள்ளனர்.

Kalna (WB):

மேற்கு வங்கத்தில் சைக்கிள் செயின், இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி பெண்களை கொன்று வந்த சீரியல் கொலைகாரர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் புதுல் மாஜி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அதில் இடம்பெற்றிருந்த சந்தேகப்படும்படியான நபரின் விவரங்களை வெளியிட்டிருந்தனர். 

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சந்தேகப்படும்படியாக இருந்தார். அவரைப் பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. 

கமருசமான் என்ற 42 வயதான நபர் ஒரு சீரியல் கொலைகாரர் என்பது தெரியவந்தது. தொடர் கொலைகளை செய்துவரும் நபரை சீரியல் கில்லர் என்று அழைப்பார்கள். கமருசமானுக்கும், புதுல் மாஜி கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். 

இதில், புதுல் மாஜிக்கு முன்பாக 4 பெண்களை கமருசமான் கொலை செய்திருக்கிறார். மதிய நேரத்தில் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டிற்குள் செல்லும் அவர், தான் மின் ரீடிங் எடுப்பதற்கு வந்ததாக கூறிக் கொள்வாராம். சமயம் பார்த்து சைக்கிள் செயின் மற்றும், இரும்புக் கம்பியால் பெண்களை தாக்கி அவர்களை கொலை செய்து வந்துள்ளார். 

இளம் பெண்களை கொன்ற பின்னர் வீட்டிலுள்ள பொருட்களை கமருசமான் கொள்ளையும் அடித்து வந்துள்ளார். ஆனால் கொள்ளை அடிப்பது அவரது நோக்கம் அல்ல என்று போலீசார் தெரிவித்தனர். சீரியல் கொலைகாரர் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

.