This Article is From Jun 04, 2019

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? உயர்நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், தற்போது வெயில் அதிகம் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மட் அணிவதில்லை என்று தமிழக அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறுக்கிட்ட நீதிபதிகள், கடற்கரை சாலையில், பைக் ரேசில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளனர், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் கூட ஹெல்மெட் அணியவில்லை என தனது வேதனை தெரிவித்தார்.

இதைத்தொர்ந்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6-ந்தேதி போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை கமி‌ஷனர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.