This Article is From Mar 30, 2019

தேர்தல் நேரத்தில் விண்வெளி ரகசியத்தை வெளியிடுவதன் அவசியம் என்ன? ப.சிதம்பரம்

தேர்தல் நேரத்தில் விண்வெளி ரகசியத்தை வெளியிடுவதன் அவசியம் என்ன? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் விண்வெளி ரகசியத்தை வெளியிடுவதன் அவசியம் என்ன? ப.சிதம்பரம்

கடந்த சில நாட்கள் முன்னதாக பொதுமக்கள் மத்தியில் திடீரென உரையாற்றிய பிரதமர் மோடி, நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் ஷக்தி'சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளியில் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் உலகின் விண்வெளித்துறையில் 4வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. குறைந்த உயர சுற்றுப்பாதையில் செயற்கைக் கோளை நிறுத்தி இந்திய ராக்கெட் சாதனை படைத்துள்ளது. விண்வெளி போர் நடத்துவதற்கான திறனை இந்தியா பெற்றுவிட்டது என கூறினார்.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது.

புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். ஆனால் பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.


 

.