This Article is From Jun 06, 2019

பிரதமர் மோடியை டேக் செய்து முதல்வர் பழனிசாமி போட்ட ட்வீட்… திடீர் நீக்கத்துக்குக் காரணம் என்ன?

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சமீபத்தில் வரைவு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

பிரதமர் மோடியை டேக் செய்து முதல்வர் பழனிசாமி போட்ட ட்வீட்… திடீர் நீக்கத்துக்குக் காரணம் என்ன?

முதல்வரின் ட்வீட் நீக்கம் சர்ச்சையாகியுள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் டேக் செய்து ஒரு பதிவு செய்திருந்தார். “மதிப்பிற்க்குரிய பிரதமர் மோடிஜி அவர்களுக்கு ஒரு கோரிக்கை. தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களில் தமிழை தேர்ந்தெடுத்துப் படிக்கும் வகையில் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உலகின் மிகவும் தொன்மையான மொழிக்கு மிகப் பெரிய சேவை செய்தது போன்று இருக்கும்” என்பதே முதல்வர் பதிவிட்ட ட்வீட்டின் சாரம்சமாகும். இந்தப் பதிவை நேற்று காலையில் போட்ட முதல்வர், அடுத்த சில மணி நேரங்களில் அதை நீக்கிவிட்டார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

குறிப்பாக, பாஜக கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே, முதல்வர், தனது ட்வீட்டினை நீக்கினார் என்று சொல்லப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சமீபத்தில் வரைவு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வரின் ட்வீட் நீக்கம் சர்ச்சையாகியுள்ளது. 

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அந்த, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த வரைவு பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. 

இதைத் தொடர்ந்து மத்திய அரசு, “எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது. இது வெறும் வரைவு மட்டும்தான். இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்தது. தொடர்ந்து திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் ட்வீட் நீக்கம் குறித்து அதிமுக சார்பில் விளக்கம் அளித்துள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். இங்கு எப்போதும் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தித் திணிப்பை தமிழகம் ஏற்காது. முதல்வர் போட்ட ட்வீட், அரசியலாக்கப்பட்டது. அதனால்தான் அது உடனடியாக நீக்கப்பட்டது” என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டார். 


 

.