தபால் துறை தேர்வு ரத்துக்கான நிர்வாக காரணம் என்ன என்று ஆக.5க்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 14 தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பிர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது, தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். நடந்து முடிந்த தபால் துறை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று அவர் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணம் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக ஆகஸ்ட் 5-ஆம் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.