This Article is From May 13, 2020

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன? வைகோ கேள்வி

கொரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார்.

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன? வைகோ கேள்வி

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன? வைகோ கேள்வி

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில்  உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் ஒத்திவைக்கப்பட்டதால், அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

இதனிடையே, "ஜூன்.1ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார். 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். 

அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது, கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, வெளியிட்ட அறிக்கையில், "பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், தேர்வு எழுதத் துடித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள் ஊரடங்கு நேரத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர். மாணவர்களின் பெற்றோரும் தவியாய்த் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தேன்

தற்போது, ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியாத சூழலில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன?

இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

.