Read in English
This Article is From Sep 20, 2018

அழகிரி vs ஸ்டாலின்… அமித்ஷாவுக்கு என்ன பயன்?- மணி ஷங்கர் ஐயர்

Advertisement

நான் மீண்டும் அரசியலில் உயிர் பெற்று, 9 மாதங்கள் கழித்து சென்னைக்கும் எனது தொகுதிக்கும் முதன் முறையாக பயணப்பட உள்ளேன். தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான காலகட்டமாக இது இருந்துள்ளது. டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் மாபெறும் வெற்றி பெற்று, சொந்தமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் ஆரம்பித்துவிட்டார். இந்த புதிய கட்சியால் அஇஅதிமுக-வின் பல தொண்டர்கள் (மற்றும் சில தலைவர்கள்) தினகரன் பக்கம் தாவி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மோதலில் இருந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ், ஒன்றாக இல்லையென்றால் இல்லாமலேயே போய் விடுவோம் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இன்னொரு புறம், கமல்ஹாசன், சினிமா கவர்ச்சியையும் ரசிகர் மன்றங்களையும் நம்பி கட்சி நடத்தி வருகிறார். இதனால் தான் என்னவோ, ரஜினிகாந்த் தொடர்ந்து புதிய கட்சி தொடங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையில், பாஜக-வும், தமிழகத்தில் எப்படியாவது கால் பதித்துவிட வேண்டுமென்று பல கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.

இது எல்லாவற்றையும் விட, கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியலை இயக்கிய அச்சாணியாக இருந்த கலைஞர் கருணாநிதியின் மறைவு தான், இந்தக் காலக்கட்டத்தின் மிகப் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக-வில் பிளவு வந்தால், அதிமுக போல் அதுவும் இரு துண்டுகளாக உடையும் என்று பேசப்பட்டு வந்தது. இந்தக் கூற்றுக்கு உண்மை சேர்க்கும் விதத்தில் மு.க.அழகிரி செயல்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் போதிருந்தே, ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கியவர் அழகிரி. ஆனால் கருணாநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்ததால், 2014-ல் வேறு வழியில்லாமல், அழகிரியைக் கட்சியை விட்டு நீக்கினார்.

தனக்குப் பின்னர் திமுக தலைவர் பொறுப்புக்கு அழகிரியை விட மு.க.ஸ்டாலினைத்தான் கருணாநிதி முன்னிலைப்படுத்தினார்.

Advertisement

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, மதுரைக்குத் திரும்பிய அழகிரி, தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் வேலையில் இறங்கினார். இதே நேரத்தில் தான், ஸ்டாலின், ஒரு மனதாக திமுக-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அழகிரியின் செப்டம்பர் 5 அமைதிப் பேரணி, ஸ்டாலினுக்கு எதிராக எரியும் முதல் அஸ்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த அனைத்து நடவடிக்கைக்கு பின்னரும், அழகிரியின் கோரிக்கை தனிக்கட்சி சார்ந்தது அல்ல. மாறாக, மீண்டும் திமுக-வில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். எந்தக் கோரிக்கையையும் ஸ்டாலின் மதிக்கவில்லை. திமுக-வுக்கு உள்ளே அழகிரியால் பெரும் சலசலப்பை ஏற்படுத்த முடியும், ஆனால் கட்சிக்கு வெளியே அப்படி செய்ய முடியாது என்பது ஸ்டாலினுக்கு நன்றாகத் தெரியும். அது மிகச் சரியான கணிப்பாகவும் இருந்தது. அழகிரி தரப்பில், அமைதிப் பேரணிக்கு 1 முதல் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று ஆருடம் கூறப்பட்டது. ஆனால், அமைதிப் பேரணிக்கு அடுத்த நாளில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் (சென்னை பதிப்பு), ‘பல நூறு பேர் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர்’ என்று எழுதப்பட்டிருந்தது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலோ, ‘போலீஸ் வட்டாரம், 12 முதல் 15 ஆயிரம் பேர் தான் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்தது’ என்று எழுதினர். ஆனால் பேரணிக்கு பின்னரான செய்தியாளர்கள் சந்திப்பில், ‘1.5 லட்சம் பேர் இன்று என்னுடன் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார் அழகிரி. ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை. அழகிரி தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராகவே இருக்கிறார்.

Advertisement

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அழகிரி, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கட்சியின் உண்மையான தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறி வருகிறார்.

சென்னை எப்போதும் திமுக-வின் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்த இடத்தில் அழகிரி தனது பலத்தைக் காட்ட நினைத்தது மிகவும் தவறு. அவர் பல ‘நூறு’ பேரை மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அழைத்து வந்தது உண்மை தான். ஆனால், எத்தனை பேரை பேருந்து அல்லது ரயில் மூலம் அவரால் அழைத்து வந்துவிட முடியும். பல லட்சம் திமுக தொண்டர்கள் அழகிரியின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் தான், அது திருப்பத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும். அது கண்டிப்பாக நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏமாற்றத்துடன் தான் அழகிரி மதுரைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

Advertisement

தமிழ்நாட்டில் ஆதரவை விரிவுபடுத்த கூட்டணியை பாஜக எதிர்பார்க்கிறது.

எனவே, ஸ்டாலினுக்குத் தான் இதில் வெற்றி கிடைத்துள்ளது. கட்சியில் தன் பலத்தை நிலைநாட்டியுள்ளார். சட்டபூர்வமாக தன்னை தலைவராக நியமித்துக் கொண்டார். அவரது தலைமைக்கு எந்த விதப் போட்டியும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து வலை விரித்து வருகிறது பாஜக. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னர் வெளியிட்ட ஒரு செய்தியில், ‘அழகிரி சொந்தக் கட்சி ஆரம்பிக்க தேசிய கட்சி ஒன்று ஆதரவளிக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தேசிய கட்சி, பாஜக-வாக இருக்க மட்டுமே வாய்ப்புள்ளது. எப்படியாவது தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்று அமித்ஷா போடும் எந்த கணக்கும், குழப்பத்தில் தான் போய் முடிகிறது. அதிமுக-விலிருந்து எத்தனைப் பேர் பிரிந்தாலும், அத்தனை பேரும் பாஜக-வுக்கு எதிராகவே நிற்கின்றனர். கமல்ஹாசனும் மோடி-ஷாவுடன் எந்த அரசியல் கூட்டும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, பாஜக தான் பொது எதிரி. ரஜினிகாந்த் மட்டுமே இருக்கும் ஒரே புகளிடம். அவர், இந்துத்துவ அரசியல் குறித்து சில சாதகமான கருத்துகளை சொல்லி வந்தாலும், தனிக் கட்சி ஆரம்பிப்பது குறித்து தொடர்ந்து சுணக்கம் காட்டியே வருகிறார்.

Advertisement

ஆன்மிக அரசியல் என்பது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என ரசிகர்களிடம் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள் தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும். காங்கிரஸ், மிக வலுவாக இருக்கும் புதுச்சேரியை சேர்த்தால் 40. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி-அஜித்-ராகுல் கூட்டணியால், 73 தொகுதியிலிருந்து பாஜக 8 தொகுதிக்கு தள்ளப்படும். எனவே, 2019 லோக்சபா தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் உ.பி-யை அடுத்து தமிழகம் தான் பாஜக-வுக்கு மிக முக்கியமான இடமாக மாறும்.

Advertisement

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் மு.க.ஸ்டாலின்.

தற்போது தமிழகத்தின் மிக முக்கியமான செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி, ஜூன் 24, 2018-ல் நடத்திய கருத்து கணிப்பில் நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி 41 சதவிகித ஓட்டுகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வுக்கு 24 சதவிகிதமும், தினகரனுக்கு 8 சதவிகித ஓட்டுகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பாஜக-வுக்கு வெறும் 3 சதவிகித ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே கருத்துக் கணிப்பில் தான், அடுத்த பிரதமர் ஆக ராகுல் காந்திக்கு 37 சதவிகிதமும், மோடிக்கு 20 சதவிகிதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 64 சதவிகித மக்கள் மோடி அரசின் ஆட்சி சரியில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். கலைஞரின் இறப்புக்கு முன்னர் இந்த கணிப்புகள் செய்யப்பட்டன. அதன் பிறகு இந்த நிலைமை திமுக - காங்கிரஸுக்கு இன்னும் சாதகமாக மாறியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜெயலலிதா எம்.எல்.ஏ.-வாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக-வுடன் நட்புறவுடன் இருப்பதால், பாஜக, அரசியல் ரீதியில் நல்லப் பலனை பெறலாம் என்று எதிர்பார்க்கிறது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜக பக்கம் நின்றாலும், பாஜக-வுடன் நேரடி அரசியல் கூட்டு வைத்தால் அது அழிவில் தான் போய் முடியும் என்பதை அவர்களும் அறிந்தே இருக்கின்றனர். 1998 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஜெயலலிதாவே ஆதரவு தெரிவித்து, காவி சக்திகளுடன் கை கோர்த்து, வாஜ்பாய் பிரதமராக உதவி புரிந்தார். ஜஸ்வந்த் சிங், போயஸ் தோட்டத்துக்கு வந்து ஆதரவு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்ததன் பேரில், குறுகிய காலத்துக்கு ஆட்சி நீடித்தது. ஆனால், 13 மாதங்களில் தனது ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா. இதனால் வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசாங்கம் கவிழ்ந்தது.

மோடியும் அமித்ஷாவும் எந்தவித முயற்சியை எடுத்தாலும், இந்துத்துவ அரசியலை தமிழகம் விரும்பாது.

மணி ஷங்கர் ஐயர், மூத்த கங்கிரஸ் தலைவர், முன்னாள் ராஜ்யசபா-லோக்சபா எம்.பி.

Advertisement