This Article is From Oct 15, 2019

“Seeman பேசினது…”- காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்கும் பொன்னார்!

Seeman News - சீமான் விக்கிரவாண்டி பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்

“Seeman பேசினது…”- காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்கும் பொன்னார்!

Seeman News - தனது கருத்தைத் திரும்பப் பெறமாட்டேன் என்றும் சீமான் கூறியுள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன், அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக சீமான் விக்கிரவாண்டி பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

அதே மாதிரிதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். சரிதான் போடா. ஒரு காலம் வரும். வரலாறு திரும்ப எழுதப்படும். என் இனத்தை இந்திய ராணுவம், அமைதிப் படை என்கிற அணியாயப் படையை அனுப்பி என் இன மக்கள் கொன்று குவித்த, என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்நிலையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து சீமான், “என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். நான் பேசியதைத் திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதைத்தான் 25 ஆண்டுகாலமாக பேசி வருகிறேன். எதையும் நான் மாற்றிச் சொல்லவில்லை. தொடர்ந்து இப்படித்தான் பேசுவேன். காங்கிரஸ் கட்சியினருக்கு வேறு வேலை இல்லை. அதனால், இப்போது என் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதைப் போன்று பேசியதற்காக நான் முன்னரும் சிறை சென்றிருக்கிறேன். எனவே, அதற்காக அஞ்சுபவன் நான் அல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து பொன்னார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “சீமான் பேசியது மிகத் தவறான ஒன்று. அது தேவையற்றதும் கூட. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, ஒரு வெறுப்பு உணர்வு இங்கு பரப்பப்பட்டது. அதைப் போல ஒரு வெறுப்புணர்வை மீண்டும் பரப்பும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்று கருத்து கூறியுள்ளார். 


 

.