This Article is From Mar 06, 2019

மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

2020ஆம் ஆண்டுக்குள் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காந்திராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுபோதையால் விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் வருடந்தோறும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

2016-ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் முழுவதும் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால், 3 ஆண்டுகள் கடந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி 2020-ம் ஆண்டுக்குள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


 

.