This Article is From Feb 04, 2020

“இப்போ எல்ஐசி பங்கு விற்பனை, அடுத்தடுத்து…”- ஆபத்துகளை விவரிக்கும் எல்ஐசி ஊழியர்கள்!!

LIC: "எல்ஐசி-யில் வரும் லாபத்தில் 95 சதவிகித போனஸ் மக்களுக்கும், 5 சதவிகித போனஸ் அரசுக்கும் போகிறது"

“இப்போ எல்ஐசி பங்கு விற்பனை, அடுத்தடுத்து…”- ஆபத்துகளை விவரிக்கும் எல்ஐசி ஊழியர்கள்!!

LIC: "கார்ப்பரேட்கள் சேவை செய்வதற்காக உள்ளே வரப் போவது கிடையாது."

LIC: 2020 - 2021 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் அதிக கவனம் பெற்ற விஷயம்தான், ‘எல்ஐசி பங்கு விற்பனை'. மத்திய அரசுக்கு எல்ஐசி-யில் இருக்கும் பங்கில் ஒரு பகுதியை எடுத்து விற்கப் போகிறோம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடும் போதே, நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டன எதிர்க்கட்சிகள். தற்போது எல்ஐசி ஊழியர்கள் மத்தியிலும் அந்த எதிர்ப்பு பற்றிக் கொண்டுள்ளது. 

மத்திய அரசின், இந்த முடிவுக்கு எதிராக எல்ஐசி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்றும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எல்ஐசி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், செந்தில் குமார், “எல்ஐசி பங்குகள் விற்கப்படுவதால் ஏதோ ஊழியர்களான எங்களுக்குப் பிரச்னை வந்துவிடும் என்பது போல சொல்லப்படுகிறது. அப்படியெல்லாம் கிடையாது. எங்களுக்கு எப்படியும் சம்பளம் வரத்தான் போகிறது. ஆனால், மக்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும். 40 கோடி பாலிசிதாரர்கள் எல்ஐசிக்குக் கீழ் இருக்கிறார்கள். உலக அளவில் மக்கள் தொகை கணக்கிட்டீன்படி பார்த்தால், எல்ஐசி பாலிசிதாரர்களை ஒரு நாடாக நினைக்கும் பட்சத்தில், 3வது பெரிய நாடாக விளங்கும். அப்படியொரு பாரம்பரியம் கொண்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அரசின் முடிவு குலைத்துவிடும்,” என்கிறார் விளக்கமாக.

அதேபோல, பொதுக் காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், ஆனந்த், “எல்ஐசி-யில் வரும் லாபத்தில் 95 சதவிகித போனஸ் மக்களுக்கும், 5 சதவிகித போனஸ் அரசுக்கும் போகிறது. இந்த 5 சதவிகிதத்தை எடுத்து விற்றால் என்ன தவறு என்கிறார்கள். அதை கார்ப்பரேட்களிடம் கொடுத்தால் உங்களுக்கு என்னப் பிரச்னை என்று கேட்கிறார்கள். அப்படி பார்க்க முடியாது. இது ஒட்டகம் கூடாரத்திற்குள் மூக்கை விட்ட கதைதான் இது. 

பங்குகளை வாங்கி உள்ளே வரும் கார்ப்பரேட்கள், மக்களுக்குப் போக வேண்டிய 95 சதவிகிதத்தைக் குறைப்பார்கள். மொத்த அமைப்பையே சிதைப்பார்கள். கார்ப்பரேட்கள் சேவை செய்வதற்காக உள்ளே வரப் போவது கிடையாது. அவர்கள், லாபத்திற்காக மட்டுமே உள்ளே வருவார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று கொதிக்கிறார். 
 

.