New Delhi: தேர்தலை முன் கூட்டியே நடத்துவதற்காக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அம்மாநில சட்டசபையை கலைக்க பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, தேர்தலை இந்தாண்டு இறுதிக்குள் நடத்தலாமா என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் இன்று கூடி முடிவு செய்ய உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடக்க உள்ளதால், தெலங்கானா மாநில தேர்தலையும் அதனுடனேயே வைக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசிக்கும்.
‘பண்டிகைகள், வானிலை மற்றும் தேர்வுகள் ஆகியவை கருத்தில் கொண்டு தேர்தலை இந்த ஆண்டே நடத்திவிடலாமா என்பது குறித்து முடிவு செய்வோம்’ என்று தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார்.
![oqaap0m]()
தெலங்கானா மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெறக் கூடாது என்பதற்காக சபையை கலைக்க பரிந்துரைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
‘அரசியல் காரணங்கள் தான் முன் கூட்டியே சட்டசபையைக் கலைக்கக் காரணம்’ என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தாலும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநிலத் தேர்தல் நடக்கக் கூடாது என்ற எண்ணமே, அதிரடி முடிவெடுத்ததற்குக் காரணம் என்று கூறுகின்றன.
நேற்று அமைச்சரவையைக் கூட்டிய சந்திரசேகர் ராவ், சட்டசபையைக் கலைக்கப் போகும் முடிவை அறிவித்தார். இந்த முடிவு குறித்து ராவ், தேர்தல் ஆணையத்திடமும் கருத்து கேட்டார் என்று கூறப்படுகிறது.
ஒரு சட்டமன்றம் கலைக்கப்பட்டப் பிறகு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. எனவே, தெலங்கானா தேர்தல் தேதி சீக்கிரமே அறிவிக்கப்படலாம்.