மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Mumbai: கொரோனா பாதித்தவர்களின் பெயர்களை வெளியிடுவது ஏன், இதனால் அவர்களது அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படாதா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வைஷ்ணவி கோலாவே மற்றும் மகேஷ் கடேகர் என்ற விவசாயி ஆகியோர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது-
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது என்பது அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொருவருக்கும் அளித்திருக்கும் உரிமை. ஆனால் கொரோனா பாதித்தோரின் பெயர்களை வெளியிடும்போது அந்த நிகழ்வுகள் அந்தரங்க உரிமையை பறிப்பது போல் இருக்கிறது. எனவே கொரோனா பாதித்தவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது-
பாதிக்கப்பட்ட நபர்களை தெரிவித்தால் போதுமானது. அவர்களது பெயர்கள் உள்ளிட்ட விவரங்களையும் எதற்காக வெளியிட வேண்டும். இதுபற்றி மகாராஷ்டிர அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் வாதங்களை எடுத்துரைத்த வழக்கறிஞர் ஆதித்யா தாக்கர், ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி, கொரோனா பாதித்தவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என்பதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)