சீனா, உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்டில் 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. இந்த நகரங்களில் பல லட்சம் பேர் வாழ்வதற்கான அடுக்குமாடி கட்டடங்கள், ஏரிகள், சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் குறையில்லை. இருப்பினும் சில ஆயிரம் பேரே வாழ்ந்து வருகின்றனர்.
சீனாவில் இப்படி அதிக அளவில் ‘பேய் நகரங்கள்' இருப்பதற்கு காரணம் என்ன?
கடந்த பல பத்தாண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்து வருகிறது. இன்று உலகின் முக்கிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது.
ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சி கடலோர பிராந்தியங்களில் மட்டும் இருந்துவிடக் கூடாது என்று கருதிய சீன அரசு, கிராமப்புறப் பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.
இது குறித்து இத்துறை சார்ந்த வல்லுநரான டின்னி மெக்மாஹன், ‘சீன அரசு, பொருளாதாரத்தை பல இடங்களுக்கும் எடுத்துச் செல்ல கிராமப்புறங்களில் கட்டுமான சந்தையை முடுக்கிவிட்டது' என்று கூறுகிறார்.
ஆனால், அவர்கள் நினைத்தது போல மக்கள் இந்த கிராமப்புற நகரங்களுக்கு குடிபெயரவில்லை. மக்கள் ஒரு புதிய இடத்துக்கு குடியேறுவதை விரும்பவில்லை.
ஆனால், இந்த போக்கு இப்படியே இருக்கும் என்று சீன அரசு எண்ணவில்லை. காரணம் சீன பொருளாதாரம் மற்றும் அதன் மக்கள் தொகை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால், இந்த ‘பேய் நகரங்களில்' சீக்கிரமே மக்கள் குடியேறுவார்கள் என்று நம்புகிறது.