விஜய் (Vijay) நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'பிகில்' (Bigil) திரைப்பட வெளியீட்டின் போது, சிறப்புக் காட்சிகளை ரத்து செய்து பெரும் நெருக்கடி கொடுத்தது தமிழக அரசு. பிகில் படத்தின் இசை வெளியீட்டின்போது அவர் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக சொன்ன கருத்துக்கே இந்த நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் பிகில் திரைப்பட தயாரிப்பாளருக்கும் தமிழக அரசுக்கும் ஏற்பட்ட சமாதானத்தைத் தொடர்ந்து சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக ‘சர்கார்' படத்திற்கும் அதிமுக அரசு, பல விதங்களில் எதிர்ப்பு தெரிவித்தது. சில அமைச்சர்களும் ‘சர்கார்' விஜய்க்கு எதிராக காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார்கள். இப்படி ‘தளபதி' விஜய்க்கு நெருக்கடி கொடுக்கபட்டு வருவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
தனியார் யூ-டியூப் சேனலுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், “தம்பி விஜய்க்கு எதிராக இந்த அரசு ஏன் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. அதற்கு என்ன காரணம். ஏனென்றால் இந்த அரசின் பிழைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு ஆடியோ வெளியிட்டீல் அவர் அரசுக்கு எதிராக கருத்து சொன்னால், அவரின் பட வெளியீட்டுக்குப் பிரச்னை வருகிறது. நேர்மையற்ற அதிகாரம் இப்படித்தான் செயல்படும். அவர்களிடம் குற்றம் இருக்கையில் இப்படித்தானே எதிர்வினையாற்றுவார்கள்.
தம்பி விஜய்க்கு மட்டுமல்ல, தம்பி சூர்யாவுக்கும் இதே நிலைதான். அவர் இந்த அரசுக்கு எதிராகவும், அரசின் திட்டங்கள் தொடர்பாகவும் பேசினால், உடனே அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். இங்கிருக்கும் கலைத் துறையினருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் இருக்கிறது. அவர்கள் பேசினால், மக்களிடம் சென்று சேர்கிறது. அதைத் தடுக்கவே இப்படிப்பட்ட காரியத்தில் அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்,” என்றவர், இறுதியாக, “அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அதிகாரம் மிக வலிமையானது…,” என்று முடித்துக் கொண்டார்.