This Article is From Dec 20, 2018

‘பூட்டை உடைத்தே தீருவேன்’ - கைதான விஷால் ஆவேசம்

தியாகராய நகரில் இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை நேற்று பல்வேறு மூத்த தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்டனர்

‘பூட்டை உடைத்தே தீருவேன்’ - கைதான விஷால் ஆவேசம்

சென்னை, தியாகராய நகரில் இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை நேற்று பல்வேறு மூத்த தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள், பதவியில் இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, பல்வேறு புகார்களை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று சங்க அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த தயாரிப்பார் சங்கத் தலைவர் விஷால், பூட்டை உடைக்க முயற்சி செய்தார். அப்போது, காவல் துறையினர் அவரைத் தடுத்தனர். இதனால், விஷால் தரப்பினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது ஆவேசமான விஷால், ‘எங்கள் சங்க கட்டடத்துக்கு நிர்வாகிகள் நாங்கள்தான். எங்களை மீறி பூட்டுப் போடப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக போடப்பட்டுள்ள பூட்டை அகற்றியே தீருவேன். அதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

வரும் வெள்ளிக் கிழமை ஏகப்பட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. எங்களுக்கு பல வேலைகள் இருக்கின்றன. எங்களுக்கு வழிவிடுங்கள்' என்று கொதித்தார்.

நேற்று மூத்த தயாரிப்பாளர் அழகப்பன், ‘சென்ற வாரம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், யார் எப்போது வேண்டுமானாலும் திரைப்படங்களை வெளியிடலாம் என்கிறார். 4 திரைப்படங்கள் தான் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்கின்ற தீர்மானம் இருக்கிறது. அந்தத் தீர்மானத்தை மதிக்காமல் தற்போது அறிக்கை வெளியிடுகிறார்.

இப்படி செய்தால் சிறிய படத் தயாரிப்பாளர்கள் என்ன ஆவார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்கிறார் விஷால். தலைவர் ஒரு விஷயத்தை இப்படி அணுகலாமா. அப்படி அணுகுபவர் தலைவரா. விஷால் தலைவராக இருக்கவே லாயக்கற்றவர்.

நான் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருந்த போது, 7.80 கோடி ரூபாய் இருப்பில் வைத்துவிட்டுச் சென்றோம். தற்போது அது குறித்து கணக்குக் கேட்டால், யாரும் பதில் தர மறுக்கிறார்கள். அந்தப் பணம் என்னவானது? இது குறித்து நாங்கள் செய்தித் துறை அமைச்சரையும் முதல்வரையும் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளோம்.

தமிழ் ராக்கர்ஸைப் பிடிப்பேன் என்றார். தற்போது, அவர்தான் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னர் என்று தகவல்கள் வருகின்றன' என்று கொதித்தார்.

.