முந்தைய திமுக ஆட்சியின்போது (2006-2011) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த வழக்கில் ரகுபதி கமிஷனை கலைக்க கடந்த 2015-ல் உத்தரவிட்டது.
இதற்கிடையே மீண்டும் ரகுபதி கமிஷன் அமைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் விஜயன் நாராயண் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர் ஆனார். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஊழல் தடுப்பு அமைப்பிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், மீண்டும் ரகுபதி கமிஷன் அமைக்கப்படாது என்றும் நாராயண் தெரிவித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)