புதுடில்லி - நியூயார்க் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டது குறித்து ஒரு வாரத்துக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
புதுடில்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் பயண நேரம் 15 மணி நேரமாகும். கடந்த 11-ஆம் தேதி, 370 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் செல்ல கிளம்பியது. ஆனால் அந்த நேரத்தில் மோசமான வானிலை நிலவியதால் நியூயார்க்கில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படாத நிலையில், விமான ஓட்டுநரும், 370 பயணிகளும் அச்சத்தில் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே செயல்பட்டுள்ளது. அதன் மூலமாக நியூயார்க் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமான ஓட்டுநர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்
மோசமான வானிலையில் விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க உதவும் ஐஎல்எஸ் என்ற 3 முக்கிய கருவிகளும் விமானத்தில் செயல்படாமல் இருந்துள்ளன. இந்நிலையில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான தரையிறங்கி உள்ளது. இதனால் 370 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்
இந்த சம்பவம் நடைப்பெற்று ஒரு வாரம் ஆன நிலையில், liveatc.net என்ற முன்னணி இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விமான ஓட்டுநர் - கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் இணையதளத்தில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.