பாகிஸ்தானின் முதல் விண்வெளி திட்டத்திற்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
Islamabad: சீனாவின் உதவியோடு, பாகிஸ்தான் முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பவுள்ளது. 2022-ம் ஆண்டின்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
விண்வெளித் திட்டம் தொடர்பாக பாகிஸ்தானின் அமைச்சரவை கூட்டம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சீனா உடனான கூட்டு திட்டத்திற்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இந்த திட்டம் தொடர்பாக பாகிஸ்தானின் சுபார்கோ என்று அழைக்கப்படும் விண்வெளி ஆய்வு மையமும், சீன கம்பெனியும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
முன்னதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 செயற்கைக் கோளை சீன ராக்கெட்டின் உதவியால் பாகிஸ்தான் விண்ணில் செலுத்தியது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு முதன்முறையாக நவம்பர் 3-ம் தேதி செல்லவுள்ளார்.