இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று 3 சர்ச்சுகள் மற்றும் 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தற்போது வரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 359ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதில் 39 வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த மாத தொடக்கத்தின்போது, நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில், நேற்று முன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டு வெடித்தது. மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது. காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 9 தற்கொலைப்படையினர் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப்படை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.