This Article is From Aug 22, 2018

ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார்… தமிழக காவல்துறையில் சலசலப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி மீது, பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்

ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார்… தமிழக காவல்துறையில் சலசலப்பு!
Chennai:

தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி மீது, பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து சீக்கிரமே விசாரிக்கப்பட உள்ள நிலையில், அவரின் புகார் மனு தமிழக காவல்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவல்துறையின் ஐசிசி என்றழைக்கப்படும் உள்விவகார புகார் குழு, இந்த பாலியல் புகார் குறித்து நாளை விசாரிக்க உள்ளது. 

இது குறித்து பெண் எஸ்.பி சில நாட்களுக்கு முன்னர் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக புகார் மனுவை அளித்துள்ளார். அவர் மனுவில், ‘எனக்கு போலீஸ் ஐ.ஜி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். பல மாதங்களாக எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், ‘பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐசிசி கமிட்டி இந்த விஷயம் குறித்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி விசாரிக்கும்’ என்று மட்டும் தகவல் தெரிவித்துள்ளார். 

ஏடிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோர் ஐசிசி கமிட்டி சார்பில் புகாரை விசாரிப்பர் என்று தெரிவித்துள்ளார் தமிழக காவல் துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன்.

இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி, ‘தமிழக காவல் துறை சார்பில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அரசு குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியை இடமாற்றமோ சஸ்பெண்டோ செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தொடர்ந்து பணியில் இருப்பது, புகாரை நீர்த்துப் போகச் செய்யும்’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 

.