இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக மெஜாரிட்டியை நிரூபிக்கும் வரையில் மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் ஜெய சூரியா அறிவித்திருக்கிறார்.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றமாக பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை, அதிபர் சிறிசேனா கடந்த மாதம் நீக்கினார். பின்னர் முன்னாள் பிரதமராக இருந்த ராஜபக்சேவை மீண்டும் பிரதமர் பொறுப்பில் அமர்த்தினார்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தையும் அதிபர் சிறிசேன கலைத்ததால் இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்தது. சிறிசேனவின் இந்த அதிரடி முடிவுகளுக்கு பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் முடிவை மாற்றிக் கொண்ட சிறிசேன வரும் 14-ம்தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார். அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் ராஜபக்சே இருக்கிறார். அதே நேரத்தில் அதிக உறுப்பினர்களின் ஆதரவு ரனிலுக்குதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், மெஜாரிட்டியை நிரூபிக்காத வரையில் ராஜபக்சேவை ஏற்க முடியாது என்றும் ரனில்தான் பிரதமர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வரும் 14-ம்தேதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)