This Article is From Jul 08, 2019

’ராஜினாமாவை திரும்ப பெற மாட்டோம்’: அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்!

13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

’ராஜினாமாவை திரும்ப பெற மாட்டோம்’: அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்!

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 13எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

Bengaluru:

கர்நாடகாவில், ஆளும் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், ஆட்சியை காப்பாற்றும் கடைசி முயற்சியாக அம்மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் ராஜினாமா முடிவை திரும்பப் பெற போவதில்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

13 எம்எல்ஏக்களின் ராஜினாமா கர்நாடாகவில் கடும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க கூட்டணி கட்சியை சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துனர் தொடர்ந்து, ராஜ்பவன் சென்று அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்துள்ளனர்.

224 பேர் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணிக்கு 118 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில், 13 எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்படும் நிலையில் ஆளும் அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடும்.

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அமெரிக்கா சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து அவரசரமாக பெங்களூரு திரும்பிய குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி. தேவேகவுடா, துணை முதல்வர் பரமேஸ்வரா, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, "கூட்டணி அரசாங்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறும்போது, கூட்டணியை பிரிக்கும் நோக்கில் ஊடகத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்த கூட்டணி ஆட்சி அமைதியான முறையில் தொடர வேண்டும், ராஜினாமாவை திரும்ப பெற எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சித்தராமையா முதல்வராக பதவிவகிக்கவும் ஜேடிஎஸ் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.