சீன (China) அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), தங்களது நாட்டை யாராவது துண்டாட நினைதால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளம் சென்ற அதிபர் ஷி, இந்த எச்சரிக்கை விடுக்கும் தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட தகவலில், “சீனாவைத் துண்டாட நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானதுதான். சீனாவிலிருந்து எந்த பகுதியை யார் துண்டாட நினைத்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் உடல்கள் சுக்குநூறாக்கப்படும். எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்” என்று கூறியுள்ளாராம் ஷி.
ஷி ஜின்பிங், யாருக்காக இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது தெரியவில்லை என்றாலும், ஹாங் காங்கில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஜனநாயகப் போராட்டங்களை மனதில் வைத்து இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
சீனாவின் ஒரு பகுதியாக ஹாங் காங் இருந்தாலும் சீன மெயிண்லேண்டில் இல்லாத பல உரிமைகள் அங்கு உள்ளன. அதை நீக்கும் வகையில் சீனா நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுத்தான் ஹாங் காங்கில் போராட்டம் நடந்து வருகின்றன.
இந்த போராட்டங்களை வெளியிலிருக்கும் சில சக்திகள் தூண்டிவிடுவதாக சீன அரசு தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. இதனால், சீனா, விரைவில் ராணுவப் படைகளை ஹாங் காங்கில் இறக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் ஹாங் காங் போலீஸ், போராட்டக்காரர்களை சமாளித்துவிடும் என்றும் சீன தரப்பு சொல்கிறது.
அதேபோல தைவான் உடனும் சீனாவுக்குத் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949 உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தங்களை தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சீனா, தைவானும் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறது. தைவானை திரும்ப இணைக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று சீன அரசு சொல்கிறது.
இது மட்டுமல்லாமல் ஷிஜ்ஜாங் மாகாணத்தில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரை சீனா சிறைவைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா. அதை மறுத்துள்ள சீனா, மத அடிப்படைவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்க்கவே நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இப்படி சீனாவுக்குப் பல்வேறு உள்நாட்டுப் பிரச்னைகள் இருக்கும் நிலையில்தான், அதிபர் ஷி ஜின்பிங்கின் கருத்து கவனம் பெற்றுள்ளது.