தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் பெண்ணின் வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மருத்துவனமையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணுக்கு நேற்று இரவு 11.10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, உன்னாவ் பெண்ணின் மரண செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் அரசு மற்றும் அதிகாரிகளிடம் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும் தான், எனது மகள் உயிரிழக்க காரணமானவர்கள் ஐதரபாத்தில் நடந்த சம்பவம் போல் சுட்டுகொல்லப்பட வேண்டும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
எனினும், சில நாட்களில் அவர் ஜாமின் வாங்கி வெளியே வந்தார். மற்றொரு குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. எனினும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. இதில், அந்த பெண் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவமைனக்கு செல்லும் வழியில் தன் மீது தீ வைத்தவர்கள் குறித்து அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.