2019 மக்களவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் இன்று வாக்களிக்கும் மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு ஸ்பெஷல் கோரிக்கை வைத்துள்ளார். கூடவே, பிரதமர் நரேந்திர மோடியையும் கறாராக விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல், ‘2 கோடி வேலைகள் இல்லை, வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் இல்லை, நல்ல நாள் வரவே இல்லை…
அதற்கு பதிலாக:
வேலைவாய்ப்பு இல்லை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் துன்புறுகிறார்கள், மோசமான ஜி.எஸ்.டி, ரஃபேல், பொய். பொய். பொய். நம்பிக்கையின்மை. வன்முறை. வெறுப்பு. அச்சம்.
நீங்கள் இன்று இந்தியாவின் அன்மாவிற்காக ஓட்டு போடுங்கள். அவள் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள். கவனமாக ஓட்டு போடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நீங்கள் இன்று முடிவு செய்யுங்கள். வெறுப்புக்குப் பதிலாக அன்பு. பக்கோடாவுக்கு பதில் வேலைவாய்ப்பு. பிரசாரத்துக்கு பதிலாக கொள்கைகள். பல பிரிவுகளுக்கு பதிலாக ஒரே தேசம். காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். உங்களுக்காக வாக்களியுங்கள். இன்று வாக்குறுதி எடுங்கள்' என்று பதிவிட்டிருந்தது.